Wednesday, January 18, 2023

தலைவர் ராமசாமி அவர்களுடன்..

ராமசாமி அவர்களை ஊர் மக்கள் தலைவர் என அழைப்பார்கள். மக்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் மத்தியஸ்தராக இருந்து நல்லதொரு தீர்வை சொல்லுவார் எனபதால் காலப்போக்கில் தலைவர் எனும் சிறப்பு பெயருக்கு சொந்தம் ஆனார். எனக்கு நினைவு தெரிந்து இவருடைய வீட்டில் ஒரு கருப்பு-வெள்ளை டிவி இருந்து, சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபு நடித்த குருசிஷ்யன் படத்தை முதலில் இந்த டிவியில் பார்த்தது. கிரிக்கெட் போட்டிகளை பெரியப்பா ராமசாமி விரும்பி பார்க்கும் சமயங்களில் சிறுவர்களுடன் சேர்ந்து நானும் பார்ப்பேன். இவருடைய வீட்டில் போஸ்ட் ஆபீஸ் நடத்தி வந்தார். தீப்பெட்டி பெட்டிகளை உற்பத்தி செய்யும் தொழிலை பத்து வருடங்களுக்கு மேல் நடத்தினார். வீட்டுக்கு ஒருவர் என இந்த குடிசைத் தொழிலில் வேலை செய்தவர் இருந்ததை உறுதியாக சொல்லும் அளவுக்கு சிறப்பாக நடந்தது. 


வலைப்பூவிற்காக நேர்காணல் செய்ய வேண்டும் என 2012ம் வருடம், டிசம்பர் முதல் வாரமாக மொபைலில் அழைத்து சொன்ன பிறகு என்ன விசயங்களை பேச வேண்டும் என்பதை வீட்டிலே அமர்ந்து குறிப்புகள் எடுக்கிறேன் எனச் சொன்ன வேளை, மகிழ்ச்சியாக இருந்தது. முக்கடலின் சங்கமம் கன்னியாகுமரி ஊரில் நடைபெறும் சுவாமி விவேகானந்தரின் 150ம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்ட விழாவில் கலந்து கொள்வதற்காக கோவை நகரிலிருந்து பிறந்த ஊருக்கு வந்த அன்றைய தினம், கொடிகாத்த குமரன் எனும் திருப்பூர் குமரனின் நினைவு தினமாக(ஜனவரி 11) பெரியப்பா ராமசாமி அவர்களை நேர்காணல் செய்தது பெரும் பாக்கியமாக அமைந்தது. 

குறிப்பு: BADA OS எனும் செயலியில் இயங்கும் ஸ்மார்ட் போனில் பத்து நிமிட நேர்காணலை பதிவு செய்த பின்பு Canon கேமராவில் ஒளிப்பதிவு செய்தது.

Friday, January 13, 2023

தம்பி விக்னேஸ்வரன்..

சிறுவயது நண்பன் விக்னேஸ்வரனின் ஒரே மகன். மகன் தர்ஷன் பிறந்து இரண்டு வயதில் எடுத்த புகைப்படம். இப்போது பத்து ஆண்டுகளை கடந்து விட்டது. பள்ளிக்கூடம் செல்கிறான், நன்றாக ஓடியாடி விளையாடுகிறான். அப்பா விக்னேஸ்வரன் வெளிநாட்டிற்குச் சென்று வேலை பார்த்து வந்த பிறகு தற்போது ஊரிலேயே விவசாயம் செய்கிறார். கடந்த பத்து ஆண்டுகளில் விவசாய பணிகளுக்கு மழைப் பொழிவு தங்கு தடையின்றி கிடைப்பது பெரும் பாக்கியமாக அமைந்துள்ளது.



1980ம் வருடத்தில் துவங்கி 2000ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் புகைப்படம் எடுப்பது என்பது இலவச பாஸ் பாஸ், பள்ளி அடையாள அட்டை, பத்து - பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்கான அடையாள அட்டை போன்ற விஷயங்களுக்காக மட்டுமே இருந்தது. அபூர்வமாக பள்ளிக்கூடத்தில் நடைபெறும் ஆண்டு விழா, பள்ளி ஆண்டு மலருக்காக எடுத்த புகைப்படங்கள் மட்டுமே இருக்கும். ஸ்மார்ட் போன் எனும் மொபைல் போன்கள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு புகைப்படம் எடுப்பது என்பது எளிதான விசயமாக ஆகிவிட்டது. புகைப்படங்கள் எப்போதுமே பொக்கிஷம் என்பதை சில ஆண்டுகள் கடந்த பிறகே நமக்கு தெரியவரும்.