Saturday, February 10, 2024

அறுவடை எந்திரங்கள்..

உளுந்துப் பயிறு, மக்காச்சோளம் போன்ற பயிர்களை அறுவடை செய்ய பெரிய எந்திரங்கள் வந்துவிட்ட பிறகு கிராமப்புற ஊர்களில் இளைய தலைமுறை மத்தியில் விவசாயம் செய்வதில் மிகுந்த ஆர்வம் அதிகமாகிவிட்டதை கடந்த ஆறு வருடங்களாக பார்க்க முடிகிறது. இது நல்ல ஆரோக்கியமான விசயமே. இப்போதைய தலைமுறை குழந்தைகள் பொறியியல், கலை அறிவியல். மருத்துவம் போன்ற இளநிலை, முதுகலை படிப்புகளை சர்வ சாதாரணமாக படித்து முடித்து விடுகிறார்கள். சில பத்து வருடங்கள் படித்த படிப்புக்கு வேலை செய்துவிட்டு மீண்டும் பிறந்த ஊருக்கு வந்து விவசாயம் செய்வதை பார்க்கையில் வியப்பாக உள்ளது. இத்தகைய ஆர்வத்திற்கு முக்கிய காரணம் அறுவடை எந்திரங்களின் வருகையால் சாத்தியமாகி உள்ளது.  

இன்று காலையில் ஊரிலிருந்து இளையரசனேந்தலுக்கு செல்கையில் தருமத்துப்பட்டி ஊரிலிருந்து மேலப்பட்டி ஊரின் வழியாக மக்காச்சோளம் அறுவடை எந்திரம் செல்கையில், கிராமப்புறங்களில் போடப்பட்ட சின்ன சாலை முழுவதையும் ஆக்கிரமித்து இருந்த வேளை, முன்னாலும் பின்னாலும் செல்லும் வாகனங்களால் இந்த அறுவடை எந்திரத்தை விரைவில் கடந்து செல்ல முடியவில்லை. நானும் கடந்து செல்ல பத்து நிமிடங்கள் ஆனது. இது நாள் வரைக்கும் இந்த அறுவடை எந்திரங்களால் எங்குமே விபத்து என்பது ஏற்படவில்லை. மார்ச், ஏப்ரல் மாதம் வரையிலும் சாலைகளில் மக்காச்சோளம் அறுவடை எந்திரங்களின் போக்குவரத்து இருக்கும் என்பதால் வாகனம் ஓட்டுபவர்களுக்கு கொஞ்சம் சிரமம் எனச் சொல்லலாம். 

இரவு நேரம் மேலப்பட்டி வழியாக ஊருக்கு வருகையிலும் இந்த மக்காச்சோளம் அறுவடை எந்திரம் வருகை தந்து பயணிகளின் பஸ்ஸிற்கு ஒரு பதினைந்து நிமிடம் காலதாமதம் ஆனது. இருசக்கர டூவீலர் வாகனத்தில் வந்தவர்கள் ஒரு ஓரமாக ஒதுங்க வேண்டி இருந்தது.

Monday, February 5, 2024

புதிய சாலை..

தென் மாவட்டங்களில் கடந்த வருடம் டிசம்பர் 17 தினம் தொடங்கி மறுதினம் காலை வரையிலும் இருபது மணி நேரம் பெய்த பெருமழைக்குப் பிறகு குளக்கட்டாக்குறிச்சி ஊரின் வழியாக கழுகுமலை, நடுவப்பட்டி ஊருக்குச் செல்லும் சிறிய சாலைகள் ஒன்றரை மீட்டர் அகலத்திற்கு விரிவாக்கம் செய்யப்படும் பணிகள் தொடங்கி சிறப்பாக நடந்தது. நடுவப்பட்டி ஊரிலிருந்து கழுகுமலை வரையிலான சாலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அகலப்படுத்தப்பட்டு சூரிய ஒளியின் வெளிச்சத்தில் பளபளவென மின்னுவதை பார்க்க முடிந்தது.


1997ம் ஆண்டிலிருந்து 1999ம் வருடம் வரை கழுகுமலை ஊரிலுள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்பு படிக்க ஊரிலிருந்து சைக்கிளில் மிதித்து இந்த சிறிய சாலையின் வழியாக தினமும் சென்று கஷ்டப்பட்டு படித்த எனது அன்புச் சகோதரி தற்போது புதிதாக போடப்பட்ட புத்தம் புது சாலையின் அழகை பார்க்கும் பட்சத்தில் ஒரு பிரமிப்பு உருவாகும் என்பதை சொன்னேன்.


குவைத் நாட்டில் பணி புரியும் எனது உறவினரான மாமாவிற்கு இந்த புதிய சாலையின் புகைப்படங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பிய பிறகு லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட பிரபலமான நடிகரின் திடீர் அரசியல் வருகையும் இத்தகைய மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் எனும் யூகங்களை சொல்ல, வியப்பாக இருந்தது. நெருங்கி வரும் நாடாளுமன்றத் தேர்தலும் இத்தகைய பணிகள் நடைபெறுவதற்கு கிரியா ஊக்கியாக இருந்தாலும் மகிழ்ச்சியே.