Thursday, May 1, 2014

ஆடுகளை மேய்க்கும் இளைஞனுடன்..


ஏப்ரல் 23 அன்று காலை வேளை எடுத்த புகைப்படங்கள்..


நான் அதிகாலைப் பொழுதில் கழுகுமலை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். மைல்கல் உள்ள சாலையின் இடது புறத்தில் உள்ள காட்டில் சிவகங்கை மாவட்டம் கடலாடி ஊரிலிருந்து வந்திருந்து, முத்துகுமார் என்ற இவர் ஆட்டு மந்தையை போட்டிருந்தார். நான் இவரிடம் சென்று பேசினேன். ஒரு வாரம் மந்தை இங்க இருக்கும் அண்ணே. அப்படியே முடிச்சிட்டு மைப்பாறை, வரகனூர், குகன்பாறை இப்படி நிறைய ஊருக்கு போவேன் அண்ணே. எத்தனை உருப்படி ஆடுக இருக்கும்னு கேட்டேன் நானு. சுமார் ஐநூறு ஆடுக இருக்குது. பிரிச்சு பிரிச்சு விட்டுருக்கேன். பக்கத்துல இருக்குற ராமநாதபுரத்துல ஒரு மந்தை இருக்குது. என்னோட மச்சின அங்க இருக்காரு. மந்தை முடிஞ்சு கிளம்பும்போது ஒண்ணாக் கிளம்பி செல்லுவோம் என்று சொன்னாரு. அதுக்கு அப்புறம் இவரை புகைப்படம் எடுத்தேன்...


நாகரிகத்தைக் கண்டெடுத்து
கொடுத்த நாமே
கண்டபடி பேசலாமா..?

என்ன பேசினாங்க?

என்ன பேசினாங்களா..?
என்னென்னவோ பேசுறாங்க...

போடா..கூழு குடிச்ச பயலே..!!
போடா.. குந்தக் குடிசையில்லாத பயலே..!!

போடா..பொறம்போக்கு..!!

நீயெல்லாம்...
ஆடு மேய்க்கத்தான் லாயக்கு!!
மாடு மேய்க்கத்தான் லாயக்கு..

யார, யாரு பேசுறது?
தன்னோடு பிறந்த தன் இனத்தை
தன் இனமே பேசுறது!!

கூழ்.. மட்டமான உணவா?
ஆனந்த விகடன்ல தொடரா வர்ற
ஆறாம் திணையை
ஆறு முறை படிச்சிட்டு
அப்புறமா சொல்லுங்க...

பால்ய கால நண்பன் வெங்கடேஷ்..

குந்தக் கூட குடிசையில்லாம
நம்ம இனம் நம்ம மண்ணுல
இலவச மனைப் பட்டா கேட்டு
இன்னும் அலையுதேங்குற
தவிப்பு நெருப்ப இன்னும்...
இங்க பத்தவைக்க முடியலன்னா
அப்புறம் எதுக்குங்க இந்த அரசியல்..?

ஆடு, மாடு மேய்ச்சவங்களோட அந்த
அனுபவங்கள்ல தாங்க
பண்பாடு பதப்பட்டது...
வாழ்க்கை அழகானது..
அவங்க அதிகமா பயன்படுத்தின
அழகான ஒரு தூய மொழியை
நாம எவ்வளவு எளிமையா
கொச்சை செய்துட்டோம்...

எப்படி?

எப்படியா..?
'விசிலடிச்சான் குஞ்சுகள்'னு..
அந்த ஒலி ஒண்ணும்
அர்த்தமற்ற இரைச்சலுக்கானது இல்லைங்க...

அது...
குறிஞ்சியிலும் முல்லையிலும்
தாங்கள் எங்கெங்கோ இருக்கிறோம்
எங்கே வந்துகொண்டிருக்கிறோம் என்பதை,
தூரங்களை மீறி
காட்டு அம்புகளை மீறி
தெரிவித்துக் கொள்கிற
குறியீட்டு மொழி...

அடையப்போட்ட ஆடுகளில்
ஒன்று எழுந்து
ஒழுங்கீனம் செய்ய முற்பட்டால்
இந்த மொழிதான் போய்,
மொத்த ஆட்டுக் கூட்டத்தையும்
முறை செய்யும்...

நள்ளிரவு.. இடி மின்னலுடன் மழைத்தூறல்..
உறி, பானை, தோற்படுக்கை, இவற்றோடு
ஒற்றைக்காலில் ஒரு காலை தண்டில் ஊற்றி
நனைந்தபடி நிற்கும் அந்த இடையர்,
ஒலிக்குறிப்புகளாலேயே
தம் பட்டி ஆடுகளுக்கு வர இருக்கிற
ஆபத்தினை அறிந்து
சீழ்க்கையொலி இசைக்கிறார்...

அந்த ஒலி விரைவாகப் போய்
குட்டி ஆடுகளைத் தூக்கப்போக வந்திருக்கும்
குறு நரியைத் திடுக்கிடவைத்து
முள் நிறைந்த புதருக்குள்
விரட்டிவிட்டுத் திரும்புகிறது...

உயிர் காத்த அந்த சீழ்க்கை,
வீளை என்ற மொழியை
இனி...தவறான பொதுக் கருத்தில்
கொச்சை செய்துவிடாதீர்கள்...

அது, அந்த மொழியைக் கண்டெடுத்து
நமக்குத் தந்த குறிஞ்சி, முல்லை மூத்தோரை
அவமதிப்பதாக ஆகிவிடும்...!!

திண்கால் உறியன், பானையன், அதளன்
நுண்பல் துவலை ஒருதிறம் நனைப்பத்
தண்டுகால் ஊன்றிய தனிநிலை இடையன்
மடிவீடு வீளை கடிதுசென்று இசைப்பத்
தெறிமறி பார்க்கும் குறுநரி வெரீஇ
முள்ளுடைக் குருந்தூறு இரியப் போகும்...

                        --இடைகடனார், அகநானூறு - 274, திணை - முல்லை...