Tuesday, July 16, 2013

பிரிட்டிஷ் ஆட்சி கால இந்தியாவில் கிராமங்களில் நிலவிய ஜமீன்தார்களின் கொடுங்கோல் ஆட்சியின் நடைமுறைகள் - 2

கட்டுரை - எனது இந்தியா(ஜூனியர் விகடன்) - எஸ்.ராமகிருஷ்ணன்

1054 ம் ஆண்டு சோழர்காலக் கல்வெட்டு,வீரபுத்திரன் என்பவனின் மனைவி சேந்தன் உமையாள் என்ற பெண் வரி செலுத்த முடியாமல் தற்கொலை செய்து
கொண்டதைக் குறிப்பிடுகிறது.அவளிடம் வரி வாங்கி வந்த அரசு அதிகாரி 'அரசு ஆணைக்கு' அவளை உட்படுத்தினான்.அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில் அவள் நஞ்சு குடித்து இறந்துபோனாள்.இதற்க்குக் காரணமான அரசு அலுவலருக்கு 32 காசுகள் விளக்கு எரிக்க வழங்கும்படி தண்டனை விதிக்கப்பட்டது.

வரி வசூலிக்கும்போது,சுடுசொற்களைப் பயன்படுத்துவதை 'அரவதண்டம்' என்று சோழர் காலக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பிராமணர், வெள்ளாளர் வீடுகளில் அரவதண்ட முறையைப் பயன்படுத்தக் கூடாது என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.'கடமைக்காக' வெள்ளாளரை சிறைபிடிக்கக் கூடாது' என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.இதனால்,ஆதிக்க வகுப்பினரிடம் வரி வாங்குவதில் கடுமை காட்டக் கூடாது என்ற நிலைப்பாடு சோழர் காலத்தில் வழக்கில் இருந்தது புலனாகிறது.ஜமீன்தார் முறை,இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் அறிமுகமானபோதும் வட இந்தியாவில் இருந்த அளவுக்கு தென்னிந்தியாவில் ஜமீன்தார்கள் எண்ணிக்கை அதிகம் இல்லை.
அதிகாரத்திலும் ஆடம்பரத்திலும் மோசமான நடத்தையிலும் வட இந்திய
ஜமீன்தார்களே முன்னோடிகளாக இருந்தனர்.

விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் 'நாயக்கர்' என்ற படைத் தலைவர் தமிழகத்தில் நியமிக்கப்பட்டார்.விஸ்வநாத நாயக்கர் தனது ஆட்சிக் காலத்தில் பாஞ்சலங்குறிச்சி, சிவகங்கை, எட்டயபுரம் உட்பட 72 பாளையங்களை அங்கீகரி த்தார்.'பாலாமு' என்ற தெலுங்குச் சொல்லில் இருந்துதான் பாளையம் என்ற சொல் உருவானது. 'பாலாமு' என்றால் 'ராணுவ முகாம்'  எனப் பொருள்.பேரரசின் அதிகாரத்துக்கு உட்பட்டு செயல்பட்ட பாளையக்காரர்கள் நிலையான ஒரு படையை வைத்திருந்தனர். பாளையங்களில் வரி வசூல் செய்தல்,போர்க்காலங்களில் நாயக்கர்களுக்கு படை உதவியளித்தல் ஆகியவை இவர்களின் முக்கியப் பணி.தமிழகத்தில் இருந்த பாளையங்கள் அளவில் ஒன்றுபோல இல்லை.சில பாளையங்கள் சிறியதாகவும்,சில பெரியதாகவும் இருந்தன.தலைக்கோட்டை யுத்தத்தில் விஜயநகரப் பேரரசு தோற்ற பிறகு,பிஜப்பூர் சுல்தான்களின் ஆட்சி ஏற்பட்டது. அப்போதுதான் சமஸ்தானங்கள் உண்டாக்கப்பட்டன.புதிய ஸ்தானாபதிகள் உருவாகினர்.அதன் தொடர்ச்சியாகவே,ஜமீன்தார்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்
களால் உருவாக்கப்பட்டனர்.1799 -ல் தான் சென்னை மாகாணத்தில் ஜமீன்தார்
முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.ஜமீன்தார்கள் எல்லோரும் மோசமான வர்கள் என்று வரையறுக்க முடியாது.சிலர் இந்திய சுதந்திரப் போராட்டத்து க்குப் பல்வேறு விதங்களிலும் உதவி செய்திருக்கின்றனர்.கலை,சமயம் மற்றும் மொழி வளர்ச்சிக்கு உதவி இருக்கின்றனர்.ஆனால்,பொதுவாக
ஜமீன்தார்களின் ஆடம்பர வாழ்க்கை முறையையும் அவர்களின் வரி வசூல்
செய்யும் கடுமையையும் கருத்தில்கொள்ளும்போது ஜமீன்தார்களில் பலரும்
கொடுங்கோலர்களாகவே இருந்திருக்கின்றனர்.

தென்னிந்தியாவில் ஜமீன்தார்கள் படிப்பதற்கு என்றே 'நியூட்டன் கல்லூரி' ஆங்கிலேய அரசால் நிறுவப்பட்டது.அதை,லண்டன் கல்லூரி என்றும் கூறுவார்கள்.மில்டன் இதன் முதல்வராகப் பணியாற்றினார்.மதுரை மாவட்டத்தில் நிலவிய ஜமீன்தார் முறை குறித்து ஆவ்யு செய்த வர்கீஸ்
ஜெயராஜ் தமது ஆய்வு நூலில்,வரி வசூலிக்க ஜமீன்தார்கள் மேற்கொண்ட மோசமான வழிமுறைகளைக் குறிப்பிட்டுள்ளார்.அதாவது,ஐந்து தோல் பட்டைகளைக் கொண்ட சாட்டை ஒன்றால் வெறும் உடம்பில் அடிப்பது.இவ்வாறு அடிப்பதால்,அது நிரந்தரமான தழும்பை ஏற்படுத்தும்.இந்த சவுக்கடிக்கு பயந்து மக்கள் வரி செலுத்தினர்.அதுபோலவே,தங்களின் ஆட்களைக்கொண்டு வீடுகளில் கொள்ளையடிப்பது,பெண்களை தூக்கிச் செல்வது,தானியங்களை திருடுவது,எதிர்ப்போரை உயிரோடு எரித்துவிடுவது ஆகியவற்றையும் ஜமீன்தார்கள் செய்திருக்கின்றனர்.ஜமீன்தார்களுக்கு ஒவ்வொரு கோயிலிலும் முதல் மரியாதை வழங்கப்பட்டது.நில வரி பாக்கிக்காக குடியானவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து ஏலம் விட்டனர். ஜமீன்தாரே ஏலத்தில் பங்குகொள்வர்.அவருக்குப் பயந்து வேறு யாரும் ஏலம் கேட்க வரமாட்டாகள்.இதனால் 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரை மதிப்புடைய நிலங்களை ஓரணா(ஆறு காசு) அல்லது இரண்டணாவுக்கு ஜமீன்தாரே ஏலத்தில் எடுத்துக்கொள்வார்.

திருவாங்கூர் ஆட்சிப் பகுதியில் வரி கொடதவர்கள் காதில் பூட்டுவதற் கென்றே 'இயர்லாக்' என்ற கருவியை வைத்திருந்தனர்.இதை ஒருவனது காதில் பூட்டிவிட்டால்,அதன் கணம் தாங்க முடியாமல் காதை இழுத்துத்
துன்புறுத்தும்.ஒரு கட்டத்தில் பளு தாங்காமல்,காது அறுந்துவிடும். இப்படிக் கொடுமைப்படுத்தித்தான் வரி வசூல் செய்திருக்கின்றனர். கிழக்கிந்தியக் கம்பெனியின் பல்வேறு பரிசோதனைகளுக்கு முதல் களமாக விளங்கியது
வங்காளம்.ஆகவே,நவாபுகளின் விசுவாசிகளிடம் வரி வசூல் செய்யும் பணியைத் தர விரும்பவில்லை. ஆகவே,ஜமீன்தாரி முறையை அமல்படுத் தியது.இந்த முறை வங்கத்தில் வெற்றிகரமாகச் செயல்படவே,இந்தியா முழுவதும் அது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

ஜமீன்தார்கள் தங்களை ராஜா, மகாராஜா, வதேரா, தாக்கூர்,சர்தார்,மாலிக்,சவுத்திரி எனப் பல்வேறு விதமாக அழைத்துக்கொண்டனர்.இவர்கள்,நிலவரி
வசூல்செய்வதுடன்,உள்ளூர் வழக்குகளை விசாரித்து நீதி வழங்கும் உரிமையைப் பெற்றிருந்தனர்.எல்லா ஜமீன்தார்களிடமும் குண்டர் படை ஒன்றும் இருந்தது. அதனால்,விவசாயிகளைப் பல்வேறு விதமாகக் கொடுமைப்படுத்தினர்.ஜமீன்தார்கள் செய்யும் கொடுமைகளை பிரிட்டிஷ் அரசு கண்டு கொள்ளவே இல்லை.ஆகவே,இந்த விசுவாசிகள், இந்தியாவை விட்டு பிரிட்டிஷ்காரர்கள் போகக் கூடாது என்று ஆதரவு இயக்கம் நடத்தினர்.
தங்களின் விசுவாசத்தைக் காட்டிக்கொள்ள பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு குடிவிருந்து நடத்தினர். இந்த விசுவாசத்துக்காக ஜமீன்தார்களுக்கு 'ராவ் பகதூர்', 'திவான் பகதூர்' ஆகிய சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

தார்பங்கா ஜமீன்தார், இந்தியாவி -லேயே மிக அதிக வருவாய் உடையவர். பர்த்வான் ஜமீன்தார், இந்தியாவிலேயே நில வரி வசூல் செய்வதில் முதல் இடம் பெற்றிருந் -தார்.தார்பங்கா,வட பீகாரில் உள்ளது.அதன் ஜமீன்தாராக இருந்த மகேஷ் தாக்கூர் தன்னை ஓர் அரசனாகவே கருதினார்.இவரது
ஆளுகையில் 4495 கிராமங்கள் இருந்தன.தார்பங்கா ஜமீன்,2400 சதுர மைல் பரப்புடையது.துக்ளக் காலத்திலயே வடக்கு பீகாரில் தொடர்ந்து குழப்பமும் சண்டையும் நீடித்தன.அதைத் தனது இரும்புக் கரம்கொண்டு துக்ளக் ஒடுக்கினார்.வடக்கு பீகாரில் மைதிலி பிராமணர்கள் அதிகம் வசித்தனர்.அவர்களைப் பயன்படுத்தி நிர்வாகம் செய்யவும்,வரிவசூலை முறையாக மேற்கொள்ளவும் அக்பர் வழிமுறை ஒன்றை உருவாக்கினார்.அதன்படி,பண்டிட் சக்கரவர்த்தி தாக்கூர் என்பவரின் இளைய மகன் மகேஷ் தாக்கூரை,இந்தப் பகுதியின் ஆட்சியா -ளராக நியமனம் செய்தார்.மகேஷ் தாக்கூரும் அவரது வம்சா வழியினரும் தார்பங்காவை ஆட்சிசெய்தனர்.இவர்கள் மதுபானி அரச குடும்பம் என்றே அழைக்கப்பட்டனர்.இவர்கள் மகாராஜா பட்டம் சூடிக்கொள்ள பிரிட்டிஷ் அரசு அனுமதித்தது.

தார்பங்கா ஜமீனில் வரி வசூல் செய்ய 7500 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.இவர்கள் கெடுபிடியாக வசூல் வேட்டை நடத்தினர்.தார்பங்கா ஜமீன்தார்கள்
மைதிலி பிராமணர்கள் என்ற காரணத்தால்,அதீத வைதீக மனப்பாங்கு கொண்டவர்களாக இருந்தனர்.இவர்களின் அனுமதி பெற்றே எவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.ஆண்டுக்கு 55 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டிக்கொண்டு இருந்த இவர்கள், வைரம்,வைடூரியம் என வாங்கிக் குவித்ததோடு மற்ற குறுநில மன்னர்க -ளுக்கு கடனுதவி செய்யுமளவு வசதியாகவும் இருந்தனர்.1685 - ல் இவர்கள் வரி வசூல் செய்த தொகை ரூ.769287.இது மிகப் பெரிய வருவாய்.

1880 - 1881 ஆண்டுகளில் வங்காளத்தில் 20 ஆயிரம் ஏக்கர்களுக்கு மேல் வைத்திருந்த ஜமீன்தார்களின் எண்ணிக்கை 500.இவர்கள் மூலம் நில வரியாகப் பெறப்பட்ட தொகை 3,75,41,188.அதாவது நாலு மில்லியன் பவுண்ட்ஸ்.

தார்பங்கா ஜமீன்தார்களின் பிள்ளைகள் படிப்பதற்காக லண்டனுக்கு அனுப்பி
வைக்கப்பட்டனர்.மேற்கத்தியக் கல்வியும் கலாச்சாரமும் கொண்டவர்களாக
வளர்க்கப்பட்ட அவர்கள்,பிரிட்டிஷ் அரசின் தீவிர விசுவாசிகளாக செயல் பட்டனர். பின்னாட்களில் இந்திய சுதந்திர எழுச்சி எங்கே தங்களின் அதிகாரத்தைப் பறித்துவிடுமோ என்று அச்சம்கொண்டு காங்கிரஸ் கட்சியோடு இணைந்து செயல்பட ஆரம்பித்தனர்.காங்கிரஸ் மாநாடு
நடத்துவதற்கு உதவி செய்தனர்.ஜமீன்தார்களின் பொதுவான வழிமுறையாக
இருந்தது.

நேரடி வாரிசுகள் இல்லாமல் போன பல ஜமீன்தார்களின் குடும்பங்களில்
அடுத்த வாரிசு யார் என்பதற்கு மோதல்களும் வன்முறையும் நடந்தன. இங்கிலாந்தில் உள்ள ராணியிடம் நியாயம் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டன.இந்த வழக்கு -களில் சில இன்னமும் நிலுவையில் இருக்கின்றன. சென்னை
மாகாணத்தை பொருத்தவரை,அதன் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கு, அதாவது 20,945,456 ஏக்கர் நிலம் ஜமீன்தார்களிடம் இருந்தது.1911 - ல் இதன் மூலம் கிடைத்த வருவாய் தொகை,9,78,3,167 ரூபாய்.1946 - ல் ஜமீன்தார் முறையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக கமிட்டி அமைக்கப்பட்டது.அந்தக் கமிட்டி,1948 - ல் தனது ஆய்வறிக்கையை சமர்பித்தது.1950 - ம் ஆண்டு ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்டது.ஆனாலும்,அது சார்ந்த வழக்குகள்,நிலப்பிரச்சினை இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

நன்றி - எழுத்தாளர்-எஸ்.ராமகிருஸ்ணன் 
-------------------------------------------------------------------------------------------------------------------------------
வரலாறு என்பது கடந்த காலமில்லை.அது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் உருவாக்கும் அரூபசக்தி.வரலாற்றை புரிந்துகொள்வதும்,அதன் நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டியதும் ஒவ்வொரு மனிதனும் மேற்கொள்ள வேண்டிய செயல்களாகும். அதற்கான எத்தனிப்பாகவே "எனது இந்தியா" தொடரை எழுதி வந்தேன். வரலாறு என்பது பெருங்கடல்.அதன் ஊடகப் பயணித்து நான் கண்டறிந்த உண்மைகளில் சிலவற்றை இந்தத் தொடரின் வழியே வெளிப்படுத்த முடிந்தது சந்தோசமான அனுபவம். வரலாற்றை அறிந்து கொள்வதென்பது முடிவில்லாத தேடல்.உள்ளங்கையில் அள்ளிய கடலைப் போல என் அளவில் கற்றுக் கொண்ட வரலாற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.இன்னொரு தருணத்தில் இன்னொரு பயணத்தில் மீண்டும் நாம் வரலாற்றை பகிர்ந்து கொள்வோம் என்று கனத்த இதயத்துடன் 52 வது தொடர் வரைக்கும் எழுத்துலகில் ஒரு புதிய சகாப்தம் படைத்து வாசகர்களிடமிருந்து விடைபெற்றார்.தமிழ் உலகின் நட்சத்திர எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ஜூனியர் விகடன் தொடரில் தமிழ் சமூகத்திற்கு புதியதொரு வரலாற்று தொடரை அறிமுகப் -படுத்தினார். இவரைப் போன்ற எழுத்தில் வல்லமை படைத்த ஜாம்பவானை எங்களைப் போன்ற இளைய சமுதாயத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்த விகடன் பத்திரிக்கைக்கு கோடான கோடி இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...

பிரிட்டிஷ் ஆட்சி கால இந்தியாவில் கிராமங்களில் நிலவிய ஜமீன்தார்களின் கொடுங்கோல் ஆட்சியின் நடைமுறைகள் - 1

கட்டுரை-எனது இந்தியா(ஜூனியர் விகடன்) - எஸ்.ராமகிருஷ்ணன் 


நமது கிராமத்தில் ஜமீன்தார்களின் காலத்தில் நிலவிய ரத்தம் தோய்ந்த வரலாற்று சம்பவங்களை என்னுடைய சிறு வயதில் பெரியோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.நிலத்தகராறு காரணமாக படுகொலை சம்பவங்கள் நடை பெற்றது,கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பத்து வருடங் களுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்தது,வரி மற்றும் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் பலருடைய நிலங்கள் ஜமீன்தாரர்களால் ஜப்தி செய்யப்பட்டது என்று ரத்தம் தோய்ந்த, அழுகுரல் களும், கண்ணீர் சிந்தல்களும், தற்கொலைகளும் என்று கண்ணீரில் ரத்தத்தை வரவழைக்கும் சம்பவங்களை நான் நேரடியாக விவரிக்க விரும்பவில்லை. இது முடிந்து போன சம்பவங்களின் நிகழ்வுகள் அல்ல.ஒவ்வொரு கிராமத்திலும் நடைபெற்ற மக்களின் அழுகுரல்கள், மரண ஓலங்களின் நிஜங்கள்.ஆகையால் அப்போது நடைபெற்ற சம்பவங்களின் நிஜங்களை ஜூனியர் விகடன் கட்டுரையிலிருந்தே இங்கே சமர்ப்பிக்கிறேன்.


நிலவரி வசூல்தான்,ஒரு நாட்டின் முக்கிய வருமானம்.அதை எப்படி வசூல் செய்வது காலம் காலமாகத் தொடரும் பிரச்னை.தன் கையைக் கொண்டே தன் கண்ணைக் குத்தவைப்பது தான், பிரிட்டிஷ் அரசின் ராஜதந்திரம்.அப்படி,இந்தியாவின்   ஏழை விவசாயிகளை அடக்கி ஒடுக்கி வரி வசூல் செய்கிறேன் என்று,கடைசி சொட்டு ரத்தம் வரை உறிஞ்சி எடுப்பதற்கு பிரிட்டிஷ் வகுத்த திட்டமே   ஜமீன்தாரி முறை.தங்களின் வருவாயைப் பெருக்கிகொள்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பிரிட்டிஷ் அரசு உருவாக்கிய இந்த முறை,
1793 - ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.ஜமீன் என்ற பாரசீகச் சொல்லுக்கு,நிலம் என்று பொருள்.நில உடைமையாளர் என்ற பொருளில் தான் ஜமீன்தார் என்ற பெயர் உருவாக்கப்பட்டு  இருக்கிறது.நில வரி,குத்தகை
வரி,யுத்த காலங்களில் படைக்கு ஆள் அனுப்புவது,உள்ளூர் நீதி பரிபாலனம்
என்று செயல்பட்ட ஜமீன்தார்கள்,சுயேச்சையான குறிநில மன்னர்களைப் போல ஆணவமும் அதிகாரமுமாக நடந்துகொண்டனர்.

ஜமீன்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் வரலாற்றில் மறக்க முடியாத பாடம்.
மொகலாயர்கள் காலத்தில் தங்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் நில வரிவசூல் செய்வதற்கும்,உள்ளூர் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்வதற்க்கும் மான்சப்தார்கள் நியமிக்கப்பட்டனர்.உயர்குடியைச் சேர்ந்தவர்களும் ராஜ விசுவாசிகளும் மட்டுமே மான்சப்தார்களாக நியமிக்க ப்பட்டனர்.இது பெர்சிய நடைமுறை. அக்பரின் ஆட்சிக் காலத்தில் மான்சப்தார்கள் மிகுந்த செல்வாக்குடன் இருந்தனர்.இவர்களுக்கு அரசு மானியங்களும் பட்டங்களும் உயர் மரியாதைகளும் கிடைத்தன.நிலவரி வசூல் செய்வதில் மான்சப்தார்கள் கடுமையாக நடந்து கொண்டனர்.அக்பர் காலத்தில் நிலவரி வருவாய் 363 கோடி தாம்கள் என அயினி அக்பரில் ஒரு குறிப்பு இருக்கிறது.அக்பர் காலத்தில்,மாநிலங்கள் சுபாக்கள் எனவும், மாவட்டங்கள் சர்க்கார் எனவும்,தாலுக்கா என்பது பர்கானா என்றும் பிரிக்கப்பட்டிருந்தன.1579 - ல் மொகலாயப் பேரரசு  12 சுபாக்களாக பிரிக்கபட்டி ருந்தன.அக்பர் காலத்தில் நிலம் அளக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டது.

அந்த வகையில்,நிலம் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டது.பருவம் தவறாமல் பயிரிடப்படும் நிலம் பெலாஜ் என்றும்,சில பருவங்களுக்குத் தரிசாக விடப்படும் நிலம் பரவுதி எனவும்,மூன்று ஆண்டுகளு க்கும் மேலாகத் தரிசாக விடப்படும் நிலம் சச்சார் எனவும்,ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பயிரிடப் படமால் இருக்கும் நிலம் பஞ்சார் என்றும் அழைக்கப் பட்டன. மொத்த விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு விளைபொருள்,அரசாங்கத்துக்கு வரியாக
செலுத்தப்பட்டது.வரி வசூலிக்க,கார்கூன்கள் என்று அழைக்கப்பட்ட உள்ளூர் ஊழியர்கள் நியமிக்கப் பட்டனர்.அவர்களுக்குக் கூலியாக,தானியங்கள்
வழங்கப்பட்டன.மான்சப்தார் முறையின் தொடர்ச்சி யாகவே பிரிட்டிஷ்காரர்கள் ஜமீன்தார் முறையை நடைமுறைபடுத்தினர்.மொகலாயப் பேரரசர்
ஷா ஆலம் 1765 - ல் கம்பெனியுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி,வங்காளம்,
பீகார்,ஒரிஸ்ஸா ஆகிய பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமை கிழக்கிந்தியக்
கம்பெனிக்கு கிடைத்தது.இதற்கு திவானி உரிமை என்று பெயர்.கம்பெனி இதைப் பயன்படுத்தி விவசாய வரியின் மூலம் தங்களின் செல்வாக்கை அதிகப்படுத்திக் கொள்ள முடிவு செய்தது.இதற்கு முன்னோடியாக கிழக்கிந்தியக் கம்பெனி 1767 - ல் நில அளவாய்வுத் துறையை உருவாக்கி, மொத்த நிலப்பரப்பையும் அளந்தது.ஆகவே,அவர்களால் எவ்வளவு வரி விதிப்பது என்பதைத் துல்லியமாகக் கணக்கிட முடிந்தது.

வாரன் ஹேஸ்டிங்ஸ் 1772 - ல் ஏலத்தில் விடும் முறையை அறிமுகம் செய்தார்.அதன்படி வரி வசூலிக்கும் உரிமையை விரும்பியவர்கள் ஏலத்தில் எடுத்துக்கொள்ளலாம்.உரிய வரியை வசூல் செய்து அரசுக்கு செலுத்திவிட்டு,மீதமுள்ள பணத்தை தாங்களே வைத்துக் கொள்ளலாம் என்பதே இந்த முறை. இதனால், கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வரி முழுமையாகக் கிடைத்தது. ஆனால், ஏலமிடுவதிலும்,வசூல் செய்வதிலும் நிறைய முறைகேடுகள் நடந்தன.ஆகவே,இந்தத் திட்டம் தோல்வி அடைந்தது.(இன்று இதே முறையின் சற்று உருமாறிய வடிவமே,தமிழகத்தின் மாநகராட்சி மற்றும் பல்வேறு அரசுக் குத்தகைகளில் நடைமுறையில் இருக்கிறது எனபது வரலாற்று முரண்.)

அதன் பிறகு,கம்பெனி ஏஜென்ட்கள் என நியமிக்கப் பட்டவர்கள் வரி வசூல் செய்தனர்.இவர்களுக்கு நிலத்தின் வகைகள் மற்றும் குத்தகை முறை பற்றி
எதுவும் தெரியவில்லை.எனவே,ஏஜெண்டுகளாலும் நிலவரியை முழுமையாக வசூலிக்க முடியவில் லை.இந்தியாவில்,நிலம் யாருக்கு சொந்தம் என்பதைத் தீர்மானிக்க எழுத்துப்பூர்வமான சான்றுகள் மிகக் குறைவு.ஆகவே,இது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு பெரிய பிரச்சினையாக இருந்தது. இதனால்,வரி வசூல் செய்வதில் நிரந்தர முறை ஒன்றை அறிமுகம் செய்ய பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது.1793 - ல் காரன்வாலிஸ் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தார்.அது நிரந்தரமாக வரி வசூலிக்கும் உரிமை தரும் 'பெர்மனெண்ட் செட்டில்மெண்ட்' திட்டம்.அதன்படி,முந்தைய காலங்களில் நிலவரி வசூலிக்கும் உரிமை மட்டுமே பெற்றிருந்தவர்கள்,அதே நிலத்தின் உரிமையாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.அவர்கள்,ஆண்டுதோறும் கம்பெனிக்குத் செலுத்த வேண்டிய வரி,நிலையாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்தத் தொகைக்குப் பெயர் 'பெஷ்குஷ்'.

இப்படி நியமிக்கப்பட்டவர்கள் விவசாயிகளிடம் தங்கள் இஷ்டம்போல பணமாகவோ அல்லது பொருளாகவோ வசூலித்துக் கொள்ளலாம்.இவர்கள் 'ஜமீன்தார்', 'மிட்டாதார்',தாலுக்தார்' என்ற பெயர்களில் அழைக்க -ப்பட்டனர்.ஒருவேளை,ஒரு ஜமீன்தாரால் தனது ஆளுகைக்குட்பட்ட பகுதியில் நிலவரி வசூலிக்க முடியாமல் போய்விட்டால்,அந்த உரிமை கம்பெனியால் பிடுங்கப்படும்.பொதுவாக,ஜமீன்தார்கள் வாரிசு முறையில் தேர்வு செய்யப் படுவதால் ஜமீன் உரிமை வேறு ஒருவருக்குக் கிடைப்பது எளிதானது அல்ல.இந்த நடைமுறை காரணமாக,ஜமீன்தார்கள் என்ற புதிய நிலபிரபுக்கள் இந்தியாவெங்கும் உருவாக ஆரம்பித்தனர்.இவர்களில் சிலர் ஒருகாலத்தில் மன்னர்களாக இருந்து தங்களின் உரிமையை இழந்தவர்கள் மற்றும் குரு நிலமன்னர்களின் வாரிசுகள்.ஜமீன்தார் முறையால் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு இரண்டு விதங்களில் லாபம் கிடைத்தது.ஒன்று,தாங்களே நேரடியாக விவசாயிக -ளிடமிருந்து வரி வசூல் செய்யும் சிக்கலில் இருந்து விடுபடுவது. இரண்டாவது தங்களுக்கு விசுவாசிகளாக ஜமீன்தார்கள் என்ற ஓர் இனத்தையே உருவாக்கிக்கொள்வது.

பண்டைய இந்தியாவில் கிராமத்தின் நிலவரி மூலம் கிடைக்கும் வருவாய், அந்தக் கிராமத்தின் உள்ளூர் கட்டுமானம் மற்றும் விவசாயம் சார்ந்த
வளர்ச்சிக்கே பெரிதும் பயன்படுத்தப்பட்டது. ஆனால்,ஜமீன்தார் முறை அறிமுகமான பிறகு உழைப்பவனிடமிருந்து நிலம் பறிக்கப்ப ட்டதுடன், நிலவரி முழுவதும் ஜமீன்தாரின் தனிச் சொத்தாக மாறத்தொடங்கியது. ஏழை விவசாயிகள் நிலவரி செலுத்த முடியமால் தங்கள் நிலங்களை பறிகொடுத்து கூலிகளாக  மாறினார்.சிலர் குத்தகைதாரர்களாக மாறி,அதே நிலத்தில் விவசாயம் செய்தனர்.குண்டர்களைக் கொண்டு கெடுபிடியாக வரி வசூல் செய்த ஜமீன்தார்கள்,அதில் ஒரு பகுதியை தாங்கள் வைத்துக்கொண்டு மீதியை மட்டுமே அரசுக்கு செலுத்தினர்.

இதனால்,ஜமீன்தார்கள் செல்வச் செழிப்புடன் சர்வதிகாரம் படைத்தவர்களாக வாழ்ந்தனர்.சென்னை மாகாணத்தின் ஆளுநராக 1820 - ல் பொறுப்பேற்ற சர் தாமஸ் மன்றோ, 'ரயத்வாரி' முறையை அறிமுகப்படுத்தினார். இதன்படி, வரியானது ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் நேரடியாக  வசூலிக்கப்பட்டது.'ரயத்' என்ற சொல்லுக்கு 'உழவர்' என்று பொருள்.இந்த முறையில் விவசாயிகளிடமிருந்து வரி வசூல் செய்து அரசுக்கு செலுத்த இடைத்தரகர்கள் கிடையாது.ஆனால்,விதிக்கப்பட்ட வரி மிகவும்
அதிகமாக இருந்தது.ரயத்வாரி முறையில் நிலச் சொந்தக்காரர்களுக்கு 'மிராசுதார்' என்று பெயர்.

மிராசுதாரர்கள் பெரும்பகுதி நிலத்தைக் கட்டுக் குத்தகைக்கோ அல்லது வாரக்குத்தகைக்கோ விவசாயிகளிடம் விடுவார்கள்.அந்த விவசாயிகளுக்கு நிலத்தில் எந்த உரிமையும் கிடையாது.நிலச் சொந்தக் காரர்கள் இப்படிப்பட்ட சமயத்தில் விவசாயிகளை வெளியேற்றி,வேறு விவசாயிக்கு அந்த நிலத்தைக் கொடுக்கலாம்.இதனால்,விளைபொருட்களில் 80
சதவிகிதத்தைக் குத்தகையாக மிராசுதாரார்களுக்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்த ரயத்வாரி முறையில் நிலங்கள் சில தனிநபர்கள் கையில் குவியத் தொடங்கின.

இதுபோலவே,'மகால்வாரி' என்றொரு வரிவிதிப்பு முறையை பஞ்சாபில் அமல்படுத்தினார்.இந்த முறையில் குத்தகை நிலங்களின் வரியை வசூல் செய்து அரசிடம் ஒப்படைக்க வேண்டியது,உள்ளூர் நிர்வாகத்தின் கடமை.இதில் நிலத்தின் தன்மைக்கு ஏற்ப வரி விதிக்கப்பட்டது.பிரிட்டிஷாரின்
இத்தகைய கொடுமையான வரிவிதிப்பு முறைகள்,பாரம்பரிய இந்திய விவசாயத்தை கொஞ்சம் கொஞ்சம் அமுக்கிக் கொள்ளத் தொடங்கின.

பழந்தமிழகத்தில் வரி வசூல் செய்வது மிகவும் கெடுபிடியாக நடைபெற்றுள்ளது என்பதை விவரிக்கும் வரலாற்று ஆய்வாளர் ஆ.சிவசுப்பிர மணியன்,தனது 'தமிழ்ச் சமூகத்தில் வரி' என்ற கட்டுரையில்,பல அரிய தகவல்களைக் கொடுத்துள்ளார்.சோழர் காலக் கல்வெட்டுகள் சிலவற்றில் 'மண் களம் உடைத்து' வெண்கலம் எடுத்து' என்ற தொடர் இடம்பெற்று இருக்கிறது. இந்தத் தொடர் சோழப் பேரரசின் அலுவலர்கள் வரி வாங்குவதில் எவ்வளவு கடுமையாக நடந்து கொண்டனர் என்பதைக் காட்டுகிறது.வரி செலுத்த முடியாத ஒருவன் வீட்டுக்குள் நுழைந்து,அவனது வீட்டிலுள்ள மதிப்பு வாய்ந்த பொருளான வெண்கலப் பாத்திரங்களைப் பறிமுதல் செய்வதை 'வெண்கலம் எடுத்து' என்ற சொல் குறிக்கிறது. வெண்கலப் பாத்திரங்கள் எதுவும் இன்றி வெறும் மண் பாத்திரங்கள் மட்டுமே இருந்தால்,அதைப் பறிமுதல் செய்வதால் பயன் இல்லை. இருந்தாலும், அவனுக்குத் தண்டனை வழங்கும் வழிமுறையாக அந்த மண் பாத்திரங்களை உடைத்து நொறுக்குவதை 'மண்கலம் உடைத்து' என்ற சொல் உணர்த்துகிறது. வரி செலுத்த இயலாதவனின் உலோகப் பாத்திரங்களைப் பறிமுதல் செய்தும் மண் பாத்திரங்களை உடைத்தும் அவன் சமைத்து உன்ன முடியாது செய்வது பொற்காலச் சோழர்களின் வரிவாங்கும் வழிமுறைகளில் ஒன்றாக இருந்துள்ளது.