Saturday, April 20, 2024

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு..

சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி தேர்தல் என அனைத்து விதமான வாக்குப் பதிவும் காளியம்மன் கோவிலுக்கு இடதுபுறமாக உள்ள கட்டிட வளாகத்தில் நடைபெறும். கோவிலை புனரமைத்து புதிதாக கட்ட வேண்டி கடந்த வருடம் காளியம்மன் கோவில் இடிக்கப்பட்டு புதிதாக கட்டிட வளாகப் பணிகள் நடைபெறுவதால், அருகிலுள்ள கட்டிடத்தில் வாக்குப் பதிவு நடைபெறவில்லை. இதற்கு மாற்றாக, கழுகுமலை ஊருக்குச் செல்லும் சாலையிலிருந்து ஐநூறு மீட்டர் தொலைவில் வலதுபுறமாக உள்ள குடியிருப்பில் புதிதாக கட்டப்பட்ட அறையில் ஏப்ரல் 19 வெள்ளிக்கிழமை காலை வேளை தொடங்கி மாலை வேளை வரை வாக்குப் பதிவு நடந்தது. என்னுடைய வாக்கினை நடுப்பகல் சூரிய வெளிச்சம் பொழுதாகச் சென்று பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றினேன். ஸ்ரீராமனின் பெயரை தன்னுடைய பெயரில் கொண்ட தீவிரமான கட்சி நண்பர், எனக்குப் பிறகு வந்து தன்னுடைய வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை செய்ததாக சொல்லி மகிழ்ச்சியுடன் பேசினார்.

Thursday, April 18, 2024

தேர்தலில் ஓட்டுப்போட பணம்..

2012ம் வருடம், சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் ஓட்டுப்போட ஒரு ஓட்டுக்கு ஆயிரத்தி ஐநூறு ரூபாயை வீட்டிற்கே வந்து  கொடுத்தார்கள். சங்கரன்கோவில் நகரில் பணம் என்பது கங்கை வெள்ளமாக பாய்ந்ததை கண்டு பொது மக்களே பிரமித்து போனார்கள். இதற்குப் பின்னர் 2016ம் வருடம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒட்டுக்குப் பணம் கொடுப்பதில் புதிய பரிமாணம் அடைந்தது. 2019ம் வருடம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுப்போட ஒரு கட்சி ஐநூறு ரூபாயும், ஒரு கட்சி நூறு ரூபாயும் கொடுத்தது. இரண்டு வருடங்கள் பிறகு 2021ம் வருடம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுப்போட ஒரு கட்சி ஆயிரம் ரூபாயும், ஒரு கட்சி இருநூறு ரூபாயும் கொடுத்தது. 

ஐநூறு.. நூறு ரூபாய்.. **ஆயிரம், இருநூறு ரூபாய்.. இந்த இரண்டு வகையான வள்ளல் குணத்திற்கு உண்டான ஒற்றுமையை பார்க்கும்போது ஓட்டுப்போடும் ஏழை, எளிய பாமர மக்களை அரசியல் கட்சியினர் எப்படி புரிந்து கொண்டு செயல்படுகின்றனர் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.