Wednesday, June 11, 2014

சிறந்த கிராமத்திற்கான சமூக நல்லிணக்க விருது..

நேற்று காலை வேளை.. நண்பன் கண்ணன் மொபைலில் அழைத்து திருநெல்வேலி மாவட்டத்தின் சிறந்த சமூக நல்லிணக்க கிராமம் என்ற விருதினை கொடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 485 கிராமங்களில், நமது ஊரான குளக்கட்டாக்குறிச்சி சிறந்த சமூக நல்லிணக்க விருதிற்கு தேர்வு செய்யப்பட்டு 09.06.2014 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கருணாகரன் அவர்களிடம், நமது ஊரின் பஞ்சாயத்து தலைவர் பத்து லட்சத்திற்கான பரிசுத் தொகையை பெற்றார் என்ற தகவலை சொன்னபோது.. எல்லையற்ற மகிழ்ச்சி உண்டானது. தினமணி நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. இணையத்தில் திருநெல்வேலி பதிப்பில் செய்தியை கண்டு மகிழ்ச்சியானது. இந்த விருது ஒட்டு மொத்த கிராம மக்களுக்கும் கிடைத்த அங்கீகாரம். நமது ஊர் பஞ்சாயத்து தலைவர் பொறுப்பு பாலசுப்பிரமணியம் அவர்களை மொபைலில் அழைத்து வாழ்த்துக்களை சொன்னது. சிறு வயதிலிருந்தே நீண்ட கால நண்பர். இவருடைய துணைவியார் பஞ்சாயத்து தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு மாதம் பின்பு கிராமத்தின் மேம்பாடு குறித்து சில விசயங்களை  பகிர்ந்து கொண்டேன். அதில் ஒன்றுதான் கிராமத்து வலைப்பூ.

அனைவருக்கும் இனிய வைகாசி விசாக திருநாள் வாழ்த்துக்கள்.



பத்திரிகை செய்தி : Click here

தினமணி பத்திரிகையில் வெளியான செய்தி - 10.06.14 - செவ்வாய் 

தீண்டாமை இல்லாத மத நல்லிணக்க கிராமமாக 
குளக்கட்டாக்குறிச்சிக்கு ரூபாய் பத்து லட்சம் பரிசு.. 

தீண்டாமையை கடைபிடிக்காத சமூக நல்லிணக்கத்துடன் அனைத்து தரப்பு மக்களும் வசிக்கும் கிராமமாக குளக்கட்டாக்குறிச்சி ஊர் தேர்வு செய்யப்பட்டு பத்து லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. குடிநீர், பாதை வசதி, பள்ளிக் கூடங்கள் சீரமைப்பு, குழந்தைகள் நல மையம் கட்டுதல், கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டிகள் அமைத்தல், புதிதாக விளக்குகள் அமைத்தல் போன்ற மக்கள் பணிகள் மேற்கொள்ளும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் விஜயகுமார், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் செழியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



குளக்கட்டாக்குறிச்சி கிராமம் - குருவிகுளம் யூனியன் பஞ்சாயத்து - திருநெல்வேலி மாவட்டம் - சங்கரன்கோவில் தாலுகா - கழுகுமலையிலிருந்து 8 கீ.மீ - கோவில்பட்டியிலிருந்து 18 கீ.மீ - பாரம்பரியமான விவசாயத் தொழிலை நம்பி வாழும் கிராமம்... ஜனநாயகம் உலாவும் கிராமம்..!! மண்ணில் முளைத்த மனிதர்கள் - உணர்ச்சியில் ஊறிய மொழி - சத்தியத்தில் நிகழும் சம்பவங்கள் - அனுமதிக்கப்பட்ட எல்லைக்கோட்டுக்குள் நிகழும் கற்பனை - நான் நடந்து பழகிய கிராமத்து மண் - எல்லோரும் அறிந்த ஆனால் எழுதப்படாத  எளியவர்களின் சரித்திரம் இந்த கிராமத்து வலைப்பூ..