Thursday, January 2, 2025

வாசிப்பு பழக்கத்தின் மூலமாக எழுதும் கலையினை கற்றுக் கொள்ளுதல்..

2016ம் வருடமாக, பிப்ரவரி மாதத்தில் மெட்ராஸில் ராமாபுரத்தில் வசிக்கும் நண்பன் ராமகிருஷ்ணன் இந்த வலைப்பூவில் எழுதப்பட்ட கட்டுரைகளை வாசித்தபோது, எனது  பார்வையிலிருந்து சொல்லப்படும் நினைவுக் குறிப்புகள் ஆரம்ப நிலையில் நன்றாக உள்ளது. இடைசெவல் ஊரில் பிறந்து புதுச்சேரியில் வசிக்கும் கரிசல் இலக்கிய எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்கள் எழுதிய  நூல்களையும், பசுமை விகடன் இதழ்களையும் தொடர்ச்சியாக படித்து வரும் பட்சத்தில், ஊரில் நடைபெறும் விவசாயப் பணிகள் சார்ந்த துல்லியமான, நுட்பமான விசயங்களை நன்றாக எழுத முடியும். பத்து வருடங்களுக்குப் பிறகு பார்க்கையில், செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தப்போகும் உலகத்தில் இந்த கிராமத்து வலைப்பூவில் எழுதப்பட்ட கட்டுரைகள் அனைவரிடமும் கவனம் பெறக்கூடும் என்ற விசயத்தை தீர்க்கதரிசனமாக சொல்லி ஊக்கப்படுத்தினார்.

பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு கொங்கு மண்டலமான கோவை நகருக்கு வந்து காளப்பட்டி ஊருக்குச் செல்லும் சாலையிலுள்ள நல்லாம்பாளையம் பழனிசாமி கவுண்டர் என்ற பெயரில் செயல்படும் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை கணினி வகுப்பில் சேர்ந்து படிக்கையில், கணிப்பொறி பாடங்களுடன் இலக்கியம், வரலாறு, அறிவியல் புனைகதை, ஆன்மீகம் சம்பந்தமான புத்தகங்களுடன் விகடன், குமுதம், இந்தியா டுடே போன்ற பத்திரிகை குழுமத்திலிருந்து வெளிவரும் வார இதழ்களை படிப்பது ஆரம்ப நிலையிலிருந்து படிப்படியாக முன்னேறி இருபது வருட காலகட்டங்களில் பல்வேறு விசயங்களை கற்றுத் தந்துள்ளதை நினைத்து பிரமிக்க வைத்தது. நம்முடைய வாழ்க்கையில் நடைபெறும் பல்வேறு விதமான துன்பகரமான விசயங்கள், சமூகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அத்தகைய தீமைகளை வேருடன் பிடுங்கி எறிந்து எதிர்கால சமுதாய குழந்தைகளுக்கு நம்மால் இயன்ற ஒரு சிறு மாற்றத்தையாவது ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்பு 2008ம் வருடத்தின் ஆரம்ப காலகட்டத்திலே உருவானது, கிரியா ஊக்கியாக அமைந்தது. 


விகடன் பத்திரிகை குழுமத்திலிருந்து மாதம் இருமுறை வெளிவரும் பசுமை விகடன் இதழானது, எண்பதிலிருந்து(80) எண்பத்தி ஐந்து(85) பக்கங்களை கொண்டதாக வேளாண்மை உற்பத்தியில் சாதிக்கும் மனிதர்களின் நேர்காணல்கள், பல்வேறுவிதமான பயிர் சாகுபடியில் கடைபிடிக்கும் முறைகளை அவர்களே செய்முறை விளக்கங்களுடன் சொல்லுவதை படிக்கையில், குளக்கட்டாக்குறிச்சி ஊரில் பருவ மழையை நம்பி கரிசல் பூமியில் மானாவரி விவசாயம் செய்யும் பணிகளுடன் ஒப்பீடு செய்து பார்க்க முடிந்தது. ஆடு, கோழிகள், வாத்து, முயல், காடை போன்ற சிறு விலங்கு பிராணிகளை வளர்த்து பெருவாரியான லாபத்தினை பார்க்கும் மனிதர்களுடைய சாதனைகளை பேசும் கட்டுரைகள், நம்முடைய ஊரில் ஆடு, கோழிகளை எப்படியாக வளர்த்து லாபம் பார்க்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. ஆக, தொடர்ந்த வாசிப்பு பழக்கமும், சிந்திக்கும் திறனும் இருந்தால் மட்டுமே இந்த வலைப்பூவில் டைரி குறிப்புகளைபோல தொடர்ச்சியாக விசயங்களை எழுதிக் கொண்டிருக்க முடியும் என்பதை அகத்தில் உணர முடிந்தது. இத்தைகைய நினைவுகளை டிஜிட்டலின் மூலமாக மற்றவர்களுக்கு பகிரப்படும் வேளையில், நம்முடைய மனதையும் மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள பேருதவி செய்கிறது. 

புகைப்படம்: கடந்த வருடம் அக்டோபர் 10 நாளின் தேதியுடன் வெளியான பசுமை விகடன் இதழின் அட்டைப் படம்.

No comments:

Post a Comment