ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் காளியம்மன் கோவில் திருவிழா, சித்திரை மாதம் அல்லது ஆவணி மாதத்தில் நடந்து வந்தது. ஒரு குடும்பத்தில் தலைக்கட்டு எனச் சொல்லப்படும் வரி வசூலிக்கப்பட்டு கோவில் கொடை விழா நடத்தப்பட்டது. காளியம்மன் தேவியை சப்பரத்தில் ஊரிலுள்ள தெருவின் வழியாக கொண்டு வருதல், நையாண்டி மேளம் குழுவினர் மேளம் அடித்தல், சப்பரம் வரும் தெற்கு வீதியின் வழியாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டு மக்களுக்கு அறிவிப்பினை செய்ய ஒலி பெருக்கியினை வைப்பதற்கு என இத்தனை விதமான செலவுகளுக்கும் தலைக்கட்டு வரியிலிருந்தே பணம் எடுத்துக் கொள்ளப்பட்டு செலவுகள் செய்யப்படும்.
நாயக்கர், யாதவர் சமுதாயத்தினர் இருவரும் இணைந்து செயல்புரிந்தே காளியம்மன் கோவிலுடைய வருடாந்திர கொடை விழா நடைபெற்று வருகிறது. யாதவர் சமுதாயத்து வீட்டுப் பெண்கள் கும்மிப் பாட்டு பாடிக்கொண்டே முளைப்பாரி எடுக்கும் நிகழ்வு, அற்புதமான காட்சியாக இருக்கும். பெண் தெய்வங்களை வழிபடும் கோவில் விழாக்களில் முளைப்பாரி எடுக்கும் நிகழ்வானது, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் உள்ள கிராமங்கள், நகரங்களில் நடைபெறும் கோவில் கோடை விழாக்களில் முக்கியமான நிகழ்வாக நடைபெறுவதை அந்த மாவட்டங்களின் வழியாக பேருந்துகளில் பயணம் செய்யும்போது பார்க்கையில் அறிய முடிந்தது.
தலைக்கட்டு வரியினை வசூலிப்பதற்கு ஐந்து, ஆறு பேர்கள் கொண்ட இளைஞர்கள், பெரியவர்கள் என ஒரு குழுவாக செயல்படுவார்கள். ஊரிலிருந்து வெளியூர்களில் வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்து கொண்டு வசிக்கும் குடும்ப உறுப்பினர்களிடம் வரியினை வசூலிப்பதற்கு மூன்று பேர்கள் கொண்ட குழுவினர் சென்று வருவார்கள். காளியம்மன் சாமியின் சப்பரம் வீதியின் வழியாக உலா வந்து மறுதினம் மஞ்சள் நீராட்டு விழா முடிந்த பிறகு அன்றைய தினம் இரவு வேளை, சினிமாப் பாடல்களை கொண்டு பாடும் இன்னிசை கச்சேரி விழா நடைபெறும். எனக்கு நினைவு தெரிந்து 2006ம் வருடம் வரையிலும், ஒரு நாள் இரவு இரண்டு சினிமாப் படங்களும், மறுநாள் கரகாட்டம் எனும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
No comments:
Post a Comment