Thursday, November 26, 2009

விடாது கருப்பு @மர்மதேசம் டிவி சீரியல்..

கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 1997ம் வருடத்தின் ஜூன் மாதம், +1 வகுப்பில் கணித பாடப்பிரிவில் சேர்ந்த பிறகு இந்த வருடத்தின் டிசம்பரில் கேபிள் டிவி இணைப்பினை அப்பா ராமகிருஷ்ணன் வீட்டிற்கு கொண்டு வந்தார். வீட்டில் இருந்தது போர்டபிள் கருப்பு - வெள்ளை டிவி. +2 வகுப்பு பொதுத்தேர்வு சமயமாக இந்த சேட்டிலைட் கேபிள் டிவி இணைப்பு பாடங்களை படிப்பதிலே பாதிப்புகளை ஏற்படுத்துமே என்று அப்பாவிடம் சொன்னதற்கு காதில் வாங்கி கொள்ளாது, பெரிய விசயமாக எடுத்துக் கொள்ளவே இல்லை. புதிய புதிய படங்களை பார்ப்பதற்கு நல்ல வாய்ப்பாக இருக்கிற காரணத்தால், மேற்கொண்டு எதுவுமே சொல்லவில்லை. அன்புச் சகோதரியின் வீட்டிலும் சேட்டிலைட் கேபிள் டிவி இணைப்பு வந்துவிட்டதாக சொன்னார். அன்புச் சகோதரியுடன் கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணிதப் பிரிவில் படிக்கும் ஒரு மாணவியின் உடன் பிறந்த சகோதரனே அருகிலுள்ள வடக்கூர் ஊரில் ஒரு வீட்டினை வாடகைக்கு பிடித்து அங்கு டிஸ் ஆண்டனாக்களை பொருத்தி கேபிள் டிவி இணைப்பினை கொண்டு வந்து ஊரில் பெரிய புரட்சி ஒன்றினை செய்திருந்தார். வெளியுலகம் பற்றி அதிகமாக தெரியாத ஊரிலுள்ள மக்களுக்கு சேட்டிலைட் டிவியின் மூலமாக ஒளிபரப்பாகும் நாட்டு நடப்பு செய்திகளை கேட்டு உலகத்தில் நடக்கும் அரசியல், சமூகம் சம்பந்தமான விசயங்களை தெரிந்து கொள்வார்கள் என மனதில் நினைத்தது. 

ஐந்து, ஆறு மாதங்களில் ஊரிலுள்ள மக்கள் பார்க்கும் பொழுதுபோக்கு சம்பந்தமான விசயங்கள் நேருக்கு மாறாக இருந்தது. குடும்பங்கள் சம்பந்தமான டிவி சீரியல்களே வீட்டிலுள்ள பெண்களிடம் வரவேற்பை பெற்று சினிமாப் படங்களை பின்னுக்குத் தள்ளி இருந்தது. இந்திரா செளந்திரராஜன் எழுதிய "விட்டு விடு கருப்பா" புதினத்தை மையமாக கொண்டு இயக்குநர் சிகரம் என அழைக்கப்படும் கே.பாலச்சந்தர் சாரின் மின்பிம்பங்கள் தயாரிப்பில் உருவான @விடாது கருப்பு "மர்ம தேசம்" டிவி சீரியல் ஸ்ரீமந் நாராயணனின் கடைசி அவதாரமான @கல்கி அவதாரத்தினை பேசும் விதமாக ஒளிபரப்பாகி ஒரு மாத காலத்திற்குள்ளாக அனைத்து தரப்பு ரசிகர்களின் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தது.

பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு @விடாது கருப்பு "மர்ம தேசம்" இந்த ஒரு டிவி சீரியலை மட்டுமே மிகவும் ஆர்வமுடன் பார்த்துவிட்டு +1 வகுப்பு பாடங்களை படிக்கத் தொடங்கிவிடுவது அன்றாடப் பழக்கமானது. பெளர்ணமி நிலவின் பிரகாசமான ஒளி வெளிச்சத்தில் மர்மதேசம் என்ற மிரட்டலான குரலுடன், வெள்ளைக் குதிரையின் கணைப்புச் சத்தமுடன் ஸ்ரீமந் நாராயணின் பத்து அவதாரங்களை பேசும் புகைப்படங்களுடன் டைட்டில் காட்சி ஓடும் இசையினை கேட்பதற்கே பிரமிப்பாக இருக்கும்.

ஓம் நமோ நாராயணா.

Friday, November 20, 2009

கிரிக்கெட் போட்டிகளின் குறிப்புகள்..

குளக்கட்டாக்குறிச்சி ஊரிலிருந்து தெற்கு திசையிலுள்ள கழுகுமலை ஊருக்கு சைக்கிளில் போய் வருவதற்கு பதினான்கு கிலோ மீட்டர் என்பது உடம்பிற்கு நல்லதொரு உடற்பயிற்சி போன்றே இருந்தது. வீட்டிற்கு வந்து இரண்டு மணி நேரம் பாடங்களை நன்றாக படித்ததும் நல்ல தூக்கம் வந்துவிடும். இங்கிலீஷ், அறிவியல், கணிதம் பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வீட்டிற்கு வந்து படிக்கையில் சிரத்தையுடன் படிப்பது. காலை வேளை 07:45 மணிக்கு சைக்கிளில் கிளம்பினால் மெதுவாகச் சென்றவாறே நாற்பது நிமிடங்களில் ஏழு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கழுகுமலை ஊருக்குச் சென்றுவிடலாம். கழுகுமலை ஒரு பேரூராட்சி ஊர். ஸ்ரீமுருகப்பெருமான் வீற்றிருந்து அருள்புரியும் கழுகாசலமூர்த்தி எனும் பழமையான, பிரசித்தி பெற்ற கோவில் அமையப்பெற்ற ஊர் எனும் சிறப்பினை உடையது. ஜடாயூவின் உடன்பிறந்த அண்ணன் சம்பாதி முக்திபெற்ற தலம் என்னும் வரலாற்றினை உடையது. ஆடி மாதத்தில் தெற்கு திசையை நோக்கி செல்லும்போது எதிர்காற்று பலமாக அடிக்கும் சமயங்களில், அன்புச் சகோதரி என்னுடைய சைக்கிளில் வருகையில் கூடுதலாக பத்து நிமிடங்கள் என ஐம்பது நிமிடங்கள் ஆகும். 

தென்மேற்கு பருவமழை பெய்யும் காலங்களில் சிற்சில வேளைகளில் சிவகாசி ஊரிலிருந்து வரும் பேருந்தில் சென்றுவிடுவது உண்டு. மாலை வேளை, பள்ளிக்கூடம் முடிந்து வருகையில் பேருந்தில் பயணம் செய்வது கடினமாக இருந்த காரணத்தால், ஒரு குடையை எடுத்துக் கொண்டு சைக்கிளிலே சென்றுவிடுவது பழக்கமானது.

சேட்டிலைட் சேனலில் சினிமாப் படங்களை பார்த்துவிட்டு படங்கள் சம்பந்தமான திரைக்கதை காட்சிகள் எத்தகைய தாக்கத்தினை மனதில் ஏற்படுத்துகிறது என்பதை காட்சிகளுடன் சகோதரியிடம் சொல்லும்போது ஆர்வமுடன் கேட்பார். கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான கேள்விகளை நிறைய கேட்பார். இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், நியூசிலாந்து போன்ற அணிகளில் சிறப்பாக விளையாடும் பேட்ஸ்மேன்களைப் பற்றி புள்ளி விபரங்களுடன் சொல்லுவது பழக்கமாக இருந்தது. இத்தகைய புள்ளி விபரங்கள் பலவற்றினை மனதில் ஞாபகமாக வைத்துக் கொண்டு கிரிக்கெட் விளையாட்டினை பற்றி புதிய முறையில் பேசுவதை கேட்கும் சகோதரி, என்னுடைய ஞாபக சக்தியினை பாராட்டி பேசுவார். கிரிக்கெட் போட்டிகளை பார்க்கும்போது, பேட்ஸ்மேன்கள் அடிக்கும் ரன்களை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டு அது குறித்தான விபரங்களை அலசிப் பார்க்கையில், இத்தகைய விபரங்கள் மனதில் நன்றாக பதிந்து விடுவதே புள்ளி விபரங்களை ஞாபகமாக வைத்திருக்க ஒரு காரணமாக இருந்தது. இத்தகைய சூழலில், +2 வகுப்பு பொதுத்தேர்வில் என்னைவிட சகோதரி அதிக மதிப்பெண்களை எடுத்து சாதனை புரிந்ததை கண்டு வியப்பாக இருந்தது.