Tuesday, March 10, 2015

சினிமாப் படத்தின் கதையினை பேசுதல்..

ஒரு பெண் என்பவள் பிரசவ வலியின் வேதனையுடன் குழந்தையை பெற்றெடுத்த பின்பு அந்த குழந்தையின் முகத்தினை பார்க்கும் நொடிப்பொழுதில் வேதனைகள் அனைத்தையும் மறந்து முகத்தில் பிரகாசமான மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடும். எனது அம்மாவின் கருவறையில் நான் குழந்தையாக பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த வேளையில், சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் நடித்த படங்களின் கதையினை பத்து, பதினைந்து நிமிடங்களில் கருவிலுள்ள என்னிடம் பேசியதாக எட்டு வயது சிறுவனாக படித்து கொண்டிருந்த 1990ம் வருடத்தில் எனது அப்பா சொன்னார். துவாபர யுகதத்தில் ஸ்ரீகிருஸ்ணரின் உடன் பிறந்த தங்கை சுபத்திரையின் கருவில் அர்ஜுனனின் மகன் அபிமன்யூ கருவாக வளரும்போது, போர்க்களத்தில் ஒரு வீரன் போர் செய்கையில் எதிரி நாட்டுப் படைகள் சக்கர வியூகம் அமைத்து போர் செய்கையில் எப்படி யுத்தம் செய்ய வேண்டும் என்பதை பற்றி ஸ்ரீகிருஸ்ணர் பேசிக்கொண்டே இருந்த சமயமாக, இந்த சக்கர வியூகத்திலிருந்து எப்படி வெளியே வருவது என்பதை சொல்லுவதற்கு முன்பாக அர்ஜுனனுடன் பேசிக்கொண்டே வேறு ஒரு விசயத்தில் கவனம் செலுத்தியதால் கருவிலிருந்த அபிமன்யூவுக்கு தெரியாமல் போனதாக மஹாபாரத இதிகாசத்தின் மூலமாக சொல்லப்படுகிறது. 1964ம் வருடம், ஜனவரி மாதத்தின் தை திருநாளில், பி.ஆர்.பந்துலுவின் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கர்ணனின் கேரக்டரில் நடித்து வெளியான @கர்ணன் படத்தினை பற்றிய காட்சிகளின் உரையாடல்கள் முழுவதையும் ஆறு மாதம் தொடங்கி எட்டு மாதக் குழந்தையாக கருவில் இருந்தபோது பேசியதாக, 1994ம் வருடத்தின் காலகட்டத்தில் நண்பகல் வேளையாக, என்னிடம் தற்செயலாக பேசினார். 

என்னுடைய அப்பா ராமகிருஸ்னண் அவர்களுக்கு பதினான்கு வயதாக இருந்தபோது ஈஸ்ட்மேன் கலரில் பிரம்மாண்டமாக வெளியான @கர்ணன் படத்தினை, இருபத்தி இரண்டு(22) வயதில் கோவில்பட்டி நகரின் பஸ் நிலையத்திலிருந்து ரயில் நிலையம் செல்லும் சாலையிலுள்ள ராமசாமி திரையரங்கு சென்று பார்த்த பின்பு இரண்டு மாத கால இடைவெளியில் நான்கு முறை @கர்ணன் படத்தினை பார்த்ததாக சொன்னார். மஹாபாரத கதையினை சிறுவயதிலே முழுமையாக படித்திருந்த எனது அப்பா ராமகிருஸ்ணன் அவர்களுக்கு @கர்ணன் சினிமாப் படம் பார்த்த பிறகு மனதில் ஏற்படுத்திய தாக்கத்தினை எனது தாயின் கருவறையில் குழந்தையாக இருந்த என்னிடமும் தாக்கத்தை உருவாக்கியதை அறிய முடிந்தது. 

பிலிம் ரோலிலிருந்து டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு புத்தம் புதிய பொலிவுடன் 2014ம் வருடத்தில் திரையரங்கில் ரிலீசான @கர்ணன் படத்தினை, கோவை நகரில் வசித்தபோது பூமார்க்கெட் அருகிலுள்ள தர்சனா திரையரங்கில் கர்ணன் படம் ரிலீசானதை அறிந்து நண்பன் குமரேசனுடன் சென்று நண்பகல் காட்சியாக சென்று பார்த்தபோது, கருவில் இருந்தபோதே கேட்ட "கர்ணன்" படத்தின் காட்சிகளின் அமைப்பினை நூற்றுக்கும் மேற்பட்ட முறைகள் பார்த்தது போன்ற உணர்வுகள் உருவானதைக் கண்டு மெய்சிலிர்க்க வைத்தது. @கர்ணன் போன்ற ஒரு பிரம்மாண்டமான படத்தினை டிவியில் எத்தனை முறை பார்த்தாலும் உருவாகாத தாக்கம், பெரிய திரையில் தற்போது உள்ள டிஜிட்டல் சவுண்டு தொழில்நுட்பம் மூலம் பார்க்கையில், படத்தின் ஒரிஜினாலிட்டியை நூறு சதவிகிதம் அகத்தில் உணர முடிந்தது, ஒரு ஆச்சரியமே. 

சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் நடித்த படங்களின் கதையிலிருந்து திரில்லிங்கான விசயங்களை சுவராஸ்யமான முறையில் சிற்சில சமயங்களில் சொல்லுவதை எனது அப்பா ஒரு நல்ல விகடகவிபோல பழக்கமாக வைத்திருந்ததை கண்டு ஆச்சரியமாக இருந்தது. மதுரை நகரிலுள்ள ராஜாஜி மருத்துவமனைக்கு 1982ம் வருடத்தில் எனது பிரசவத்திற்காக அம்மாவினை அப்பா அழைத்து வந்திருந்தபோது, பருவமழை கனமழையாக பெய்து கொட்டும் மழையுடன் மருத்துவமனைக்குள் சென்று மூன்று நாட்களில் தாயின் கருவிலிருந்து குழந்தையாக பிறந்ததாக எனது அம்மா சொல்லக் கேட்டு அறிந்து கொண்டது. 

சக்கரவர்த்தி திருமகன், வியாசர் விருந்து எனும் தலைப்புகளில் இந்தியாவின் மாபெரும் இதிகாசங்களான ராமயாணம், மஹாபாரதம் கதையினை பாமர மக்களும் எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக புத்தகமாக எழுதி பெரும் புரட்சியினை செய்த சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி எனும் ராஜாஜி அவர்களின் பெயரினைக் கொண்ட ராஜாஜி அரசு மருத்துவமனையில் நான் பிறந்த நிகழ்வு, மதுரை நகருக்கு வரும்போதெல்லாம் பசுமையான நினைவுகளாக ஞாபகத்திற்கு வந்து செல்லும்.